தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 48 மணிநேரத்தில் சேலம், ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்கள், சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பந்தலூர் (நீலகிரி), வால்பாறை (கோவை), ஆலந்தூர் (சென்னை) நாமக்கல், சென்னை விமான நிலையம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செமீ மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
செப்டம்பர் 17 முதல் 20ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.