அறுசுவை என்பது நம் உணவில் மிகவும் இன்றியமையாதது. “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்ற பழமொழி உண்டு. என்னதான் சுவையாக சமைத்து உப்பு கொஞ்சம் குறையாக இருந்தால் கூட நன்றாக இருக்காது. சுவைகள் ஆறு வகைப்படும். அவை இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு, உப்பு எனப்படும். அவற்றின் நன்மைகள் மற்றும் அவை கிடைக்கும் வகைகளை பற்றி பார்க்கலாம்.
அறுசுவைகளின் நன்மைகள் மற்றும் வகைகள்:
இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை கொண்டது. வாதத்தை கூட்டும். பழவகைகள், உருளை, காரட், போன்ற வகைகள் அரிசி, கோதுமை, போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகை தாவரங்களிலும் இனிப்பு சுவை அதிக அளவில் இருக்கிறது.
காரம்: உடலுக்கு உஷ்ணத்தை கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்கிறது. வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு, போன்றவற்றில் அதிகப்படியான கார சுவையுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்தியை அதிகரிக்கும் மற்றும் சளியை கட்டுப்படுத்தும். பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றில் கசப்பு சுவை அதிகமாக உள்ளது.
புளிப்பு: இரத்தக்குழாய்களில் உள்ள அழுக்கை நீக்கும் மற்றும் வாதத்தை அதிகரிக்கும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
துவர்ப்பு: இரத்தம் வெளியேறுவதை தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகசக்தியை அதிகரிக்கும். உப்பு அதிகமானால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்வகைகளில் அதிகமாக உள்ளது.