தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல இடங்களில் அதிகளவு மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வெப்பநிலை & மழைப்பொழிவு:
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரியின் தேவலா பகுதியில் அதிகபட்சமாக 10 செமீ மழையும், சேலம் மாவட்டத்தில் 5 செமீ மழையும் பதிவாகி உள்ளது. கோவையின் சோலையூர், தஞ்சாவூர் மாவட்டம், வால்பாறை ஆகிய பகுதிகளில் 3 செமீ மழைப்பொழிவு பதிவானது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா பகுதியில் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் தென்மேற்கு அரபிக்கடல், கேரள மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் 45-55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.