தமிழகத்தைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல் ஆக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் ஆக இருந்தாலும் சரி ஆளுங்கட்சி வெற்றி பெறுவதே வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. இதனை திமுக இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்து வரலாறு படைத்துள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சியான திமுக விடம் தோல்வி அடைந்துள்ளது.
அதிமுக பின்னடைவு:
தமிழகத்தில் சென்ற வருடம் நடந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் அதிமுக விற்கு பெரும் பின்னடைவாகவே அமைந்தது. மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியான அதிமுக விற்கும் அதன் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இது அதிமுக வினர் மத்தியில் பெரும் மனசோர்வினை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறை:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையம் எனும் சுயேச்சை அமைப்பின் மூலமே நடத்தப்படுகிறது. இந்த அமைப்பானது 1996 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக இரண்டாவது முறையாக பெருவாரியான இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.
எம்ஜிஆரை தோற்கடித்த கருணாநிதி:
1986ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது 97 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக மொத்தம் 64 இடங்களை கைப்பற்றி அதிமுக விற்கு அதிர்ச்சி அளித்தது. அதில் 58 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
மீண்டும் வரலாறு படைத்த திமுக:
அதிமுக விடம் அதிகார பலம், அமைச்சர்கள் என அனைத்தும் கைகளில் இருந்தும் வெற்றியை கைப்பற்ற முடியவில்லை. இது அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை காட்டுகிறது. அதிமுக வை பொறுத்தவரை இது பெரும் தோல்வியாக இல்லாவிடினும் ஆட்சியில் இருந்து கொண்டு இரண்டாம் இடம் பெருவது அதிர்ச்சிக்குரிய விசயம் தான்.