தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் என நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண, மத்திய அரசு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என மீனவர் அமைப்பு தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் படகுகள் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு, தினசரி வழங்கப்படும் ரூ.250 நிவாரணத்தை உயர்த்தி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.” என அறிவுறுத்தியதோடு, விசாரணையை, வரும் 25 க்கு தள்ளி வைத்தனர்.