மொஹகரம் பண்டிகையின் போது ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரியிருந்த வழக்கில் அனுமதி தர மறுத்துள்ளது உச்சநீதிமன்றம்.
மொஹரம் பண்டிகை:
மொஹரம் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடபடவுள்ளது. இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் ஊர்வலத்தில் பங்கேற்று கொண்டாடுவர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மதம் சார்ந்த பண்டிகைகளை கொண்டாட தடை விதித்திருந்தது, மத்திய அரசு.
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி முதல் பல விழாக்களுக்கு தடை உத்தரவு பின்பற்றப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டனர்.
அனுமதி கோரி மனு:
கடந்த ஜூன் மாதம் உத்தர பிரதேஷ மாநிலத்தை சேர்ந்த சையது கல்பே ஜவக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்தார். அதில், “பூரி ஜெகநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொண்டாடியது போல் மொஹரம் பண்டிகைக்கும் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் அதிகமான முஸ்லிம்கள் இருப்பதால் இந்த கோரிக்கையை வைக்கிறேன்” என்று கேட்டிருந்தார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பாப்டே, நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் நீதிபதி ராமசுப்பிரமணியன் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பினை வழங்கி உள்ளது.
தீர்ப்பு விவரம்:
முதன்மை நீதிபதி பாப்டே தெரிவித்தது “மொஹரம் பண்டிகைக்கு ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கப்படாது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். நீங்கள் பூரி ஜெகநாதர் கோவில் தேர்திருவிழாவை முன்னுதாரணமாக காட்டியுள்ளீர்கள். ஆனால், அதுவும் இதுவும் ஒன்று அல்ல. ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வழித்தடத்தில் நடைபெற்றது.
இது அப்படியானது அல்ல. பொதுவாக அனைவரும் கொண்டாட நீங்கள் கேட்டுள்ளதால் இதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டாட அனுமதி கேட்டிருந்தால் நாங்கள் வழங்கி இருப்போம். பலரின் நலன் இதில் அடங்கி இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
பூரி ஜெகநாதர் கோவில் தேர்திருவிழாவிற்கும் இதே போல் அனுமதி மறுக்கப்பட்டது. அப்படி அனுமதி கொடுத்தால் ஜெகநாத கடவுள் தங்களை மன்னிக்கமாட்டார் என்று கூறி விட்டு 5 நாட்களுக்கு பின் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.