தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், 4 முதல் 9ஆம் வகுப்புக்கு இறுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் ரமலான் பண்டிகை காரணமாக ஏப்ரல் 22ல் அறிவியல் தேர்வும், 23ல் சமூக அறிவியல் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. அதோடு இனி தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தேர்தல் நாள், பணி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை தவிர மற்ற தினங்களில் (ஏப்ரல் 26 வரை) ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.