கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு பழத்தில் வெடி வைத்து கொன்ற கயவர்கள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.
கர்ப்பிணி யானை கொலை:
கடவுளின் தேசம் என கேரளா அழைக்கப்படுகிறது. அங்கு யானைகளை தெய்வமாக வணங்குவது வழக்கம். அதுமட்டுமின்றி கேரள அரசு இலச்சினையிலும் 2 யானைகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் கோவில் யானைகளுக்கு வழங்கப்படும் மரியாதை மற்ற காட்டு யானைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவ்வப்போது காட்டு யானைகள் ஊருக்குள் உணவுத்தேடி வருவது உண்டு. அவ்வாறு வரும் யானைகள் வெடி சத்தம் மூலம் அல்லது கும்கி யானைகள் மூலம் மீண்டும் காட்டுக்குள் விரட்டப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வனப்பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் உணவுக்காக சென்ற பெண் யானைக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள வனப்பகுதிக்கு வன அதிகாரி ஒருவர் ரோந்து சென்ற பொழுது, ஆறு ஒன்றில் யானை வலியால் பிளிறியபடி நின்றுள்ளது. அது நீருக்குள் மூழ்குவதும், வெளியே வரவும் முயற்சி செய்து கொண்டிருந்தது. இதனால் 2 கும்கி யானைகளை வரவழைத்து அந்த யானையை நீரில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அவர்களால் மே 27ம் தேதி வரை யானையை வெளியே கொண்டுவர முடியவில்லை. பிறகு ஒரு புறம் சாய்ந்த யானை மீண்டும் எந்திரிக்கவே இல்லை. பிறகு கும்கி யானைகள் மூலம் அந்த யானை கரைக்கு கொண்டுவரப்பட்டது. யானை உயிரிழந்ததை உறுதி செய்த அதிகாரிகள் டாக்டர்களை வரவழைத்து பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர். அதில் யானையின் வாய் மற்றும் நாக்கு பகுதியில் வெந்துபோய் காயம் இருந்துள்ளது. அதனால் உணவருந்த முடியாமல் வலியைக் குறைக்க யானை நீரில் இறங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது.
பின்னர் வன அதிகாரி நடத்திய விசாரணையில் பசியுடன் வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து சிலர் கொடுத்தது கண்டறியப்பட்டது. யானை அதனை உண்ணும் பொழுது வெடி வெடித்து காயம் ஏற்பட்டு உள்ளது. யானை கர்ப்பமாக இருந்ததும் பிறகு கண்டறியப்பட்டது. இந்த செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த செயலுக்கு காரணமான கயவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அம்மாநில முதல்வர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யானைக்கு பழத்தில் வெடிவைத்து குடுத்த கயவர்கள் குறித்து துப்புக் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என 2 தன்னார்வ நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.