சைவ உணவுகளில் சாம்பார் சாதம் நாம் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகை ஆகும். இதில் அனைத்து காய்கறிகளையும் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் நிறைந்தது. விசேஷ வீடுகள் என்றாலே சாப்பாடுகளில் முதலிடம் பெறுவது சாம்பார் சாதம் தான். இப்பொழுது சுவையான சாம்பார் சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துவரம்பருப்பு – 200 கிராம்
- அரிசி – 1/2 கி
- பச்சைமிளகாய் – 3
- வரமிளகாய் – 3
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 2
- புளி
- முருங்கைக்காய் – 1
- கத்திரிக்காய் – 100 கிராம்
- மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு – 50 கிராம்
- மிளகு – 1 தேக்கரண்டி
- மல்லி – 1 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
- சோம்பு – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் – 1 தேக்கரண்டி
- உப்பு தேவையான – அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் துவரம்பருப்பு மற்றும் அரிசியை குக்கரில் 4 விசில் வரும் வரை வைத்துக்கொள்ளவும். அதன்பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, வரமிளகாய், மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி அதனை மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அது வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கி பொடி செய்துள்ள மசாலாவை அதில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு அதில் சிறிது புளியை கரைத்து ஊற்ற வேண்டும். இப்பொழுது நாம் குக்கரில் வைத்திருந்த பருப்பு சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி மூடிவைக்கவும். 5 நிமிடத்திற்கு பிறகு கடாயில் நெய் மற்றும் கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளித்து சாம்பார் சாதத்தில் சேர்க்கவும். இப்பொழுது சுவையான சாம்பார் சாதம் தயார்.