நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தினந்தோறும் தனிப்பட்ட தேவைகளுக்காக ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் வெளியூர் செல்லும் போது நல்ல சாப்பாடு கிடைக்காததால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் இதுபோன்று பயணிகள் சிரமப்பட கூடாது என்பதற்காக சென்னை பொத்தேரி ஜிஎஸ்டி சாலையில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ள நிலையில் இங்கு ஆசிய, சீன போன்ற உணவு வகைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
இது தவிர வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்பதால் எந்த நேரத்திலும் பயணிகள் சாப்பிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த உணவகத்துக்கு ‘என்.எச் 32’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி மதிப்பில் இந்த உணவகத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே அமைந்துள்ளது. இது தெற்கு ரயில்வேயால் அமைக்கப்பட்ட இரண்டாவது உணவகம் ஆகும். இதைத்தொடர்ந்து மேலும் ஒரு ரயில் உணவகம் காட்டாங்குளத்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.