மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஜூலை 2021 க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு 400 முதல் 500 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி குறித்து ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில் “எங்கள் இலக்கு ஜூலை 2021 க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு 400 முதல் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை பெற்று பயன்படுத்துவதே” என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரானவுடன் அவை நியாயமான மற்றும் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
நாட்டில் ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசியை கொண்டு செல்வதிலும், முன்களப் பணியாளர்கள் முதலில் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விநியோகத்தில் எந்த ஒரு முறைகேடுகளும் இருக்காது என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்படும் என கூறினார்.
தடுப்பூசிக்குப் பிறகு உருவாகும் பக்க விளைவுகள் பொதுவானவை என்று கூறிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ஊசி செலுத்திய இடத்திலுள்ள வலி, லேசான காய்ச்சல் மற்றும் சிவந்து போதல், பதட்டங்கள், படபடப்பு, அல்லது மயக்கம் போன்றவை தடுப்பூசிகள் செயல்பாடுகளை பாதிக்காது என தெரிவித்தார். மேலும் பண்டிகை காலங்களிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.