தமிழகத்தில் துவங்கியது வடகிழக்கு பருவமழை – 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

0

இன்று தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் துவங்கி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. செப்டம்பருக்கு பதில், கூடுதலாக சில நாட்கள் நீடித்தது. இந்நிலையில், தமிழகத்திற்கு அதிக அளவு மழைப்பொழிவு தரும் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளது.

வானிலை அறிக்கை:

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்,’ தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் துவங்கி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யலாம்.

மற்ற தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம். அதிகபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்ப நிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி பதிவாகலாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (சென்டிமீட்டரில்) மேலூர் (மதுரை) 6, மானா மதுரை (சிவகங்கை), திருப்புவனம் (சிவகங்கை) தலா 5, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 4, மண்டபம் (ராமநாதபுரம்) 3, இரணியல் (கன்னியாகுமாரி), செய்யூர் (செங்கல்பட்டு), ராஜபாளையம் (விருதுநகர்), பண்ருட்டி (கடலூர்), மேலூர் (மதுரை), வீரபாண்டி (தேனி) தலா 2. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here