தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் சேலம், தருமபுரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தின் பல பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, திருச்சி, கரூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 26 டிகிரியும், அதிகபட்சமாக 35 டிகிரியும் வெப்பநிலை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில கடலோரப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.