தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் புதிதாக கொண்டு வரப்பட்ட பயோ மெட்ரிக் முறைகளில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், இனி ஸ்மார்ட் கார்டு மூலமே பொருட்களை விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ரேஷன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகள்:
தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி முதல் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். மத்திய அரசு கொண்டு வந்த இத்திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவு பயன்பெறுவர். மேலும் மாநில அரசுகளால் விநியோகிக்கப்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் அதனை பயன்படுத்தி மலிவு விலைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இதற்கிடையில் ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் ஒருவரின் கார்டை பயன்படுத்தி மற்றொருவர் பொருட்களை பெற்று ஹோட்டல்களுக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் ஸ்மார்ட் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்கள் பெரும் வகையில் பயோ மெட்ரிக் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக ரேஷன் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் பெயர் உள்ள நபர் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்களை பெற முடியும். ஆனால் இது அமல்படுத்தப்பட்ட நாளே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. முதியவர்கள், பணிக்கு செல்பவர்கள் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி உரிய வேக இணைய வசதி இல்லாத காரணத்தால் ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து இனி வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பயோ மெட்ரிக் முறைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.