தமிழகத்தில் மக்களின் நலனுக்காக பல திட்டங்களில் அமலில் இருக்கும் சூழலில் தற்போது முக்கியமான ஒன்றாக கருதப்படுவது மகளிர் உரிமை தொகை திட்டமும், மகளிர் இலவச பேருந்து பயண திட்டமும் தான். மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், ரேஷன் கார்டுகளில் பிழைத்திருத்தம், பெயர் நீக்குதல், முகவரி மாற்றுதல் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்த காரணத்தால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர்.
இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வந்தால் தான் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு 7 மாதம் ஆகியும் இன்னும் ரேஷன் அட்டைகள் வராததால் பலரும் வேதனையடைந்தனர். இப்படி இருக்க சமீபத்தில் 40,509 ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதற்கிடையில் தற்போது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டமாக நடைபெற உள்ளதால் விதிப்படி ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தான் ஜூன் வரை ரேஷன் அட்டைகள் வழங்க வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமின்றி அதற்கு மேல் தான் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.