தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கூடுதலாக மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் 7.5. சதவீத உள் இடஒதுக்கீடு பெறும் மசோதாவுக்கு 45 நாட்களுக்கு பின் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கவுன்சிலிங் எப்போது
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு, மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை கொண்டு வந்தது. கடந்த மாதம் 16ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
கவர்னர் ஒப்புதல் அளிக்க அமைச்சர்கள் சென்று வலியுறுத்தினர். இந்நிலையில், சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு சாதகமான பதிலை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பி வைத்தார். இதனையடுத்து, உள்இடஒதுக்கீடு மசோதாவுக்கு 45 நாட்களுக்கு பின் கவர்னர் ஒப்புதல் அளித்தார். இதனால், அரசு பள்ளியில் படித்த 300 முதல் 400 மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு இடங்கள் கிடைக்கும். விரைவில், மருத்துவ கவுன்சிலிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.