தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 க்கான ஊக்கத்தொகை திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.
தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு:
தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அக்கறையுடன் முன்னெடுத்து வருகிறது தமிழக அரசு. மேலும் அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு, மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியிலும் நிம்மதியிலும் ஆழ்த்தி வருகிறது. அதாவது, பள்ளி மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறும் போதே அனைத்து திறன்களையும் கற்று தேர்ந்திருக்க வேண்டும் என்பது அரசின் முக்கிய இலக்காக உள்ளது. இந்நிலையில் தமிழ் மொழித் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு வரும் அக்டோபர் மாதம் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (CBSE/ICSE உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள் திறனறிவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50% அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50% அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மாணவ- மாணவிகள் வரும் 22-ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறும், தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.