இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியமைச்சர் மூலமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதில், விவசாயம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மத்திய பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த பிறகு, ஒவ்வொரு மாநில அரசும் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரை அடுத்தடுத்து நடத்த தயாராகி வருகிறது. அதாவது, தலைநகர் டெல்லியில் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும், இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 29 ஆம் தேதி வரையும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில், வரும் மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.