இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த முதல் மொபைல் சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் ஜியோ நிறுவனம் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ:
இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதற்கு அந்நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகைகள், இலவச டேட்டாக்கள் தான் முக்கிய காரணம். இந்நிலையில் டிராய் வெளியிட்ட தகவல்களின் படி, இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட முதல் நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.
டிராய் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த தொலைபேசி இணைப்புகள் 114 கோடியிலிருந்து, 114.4 கோடியாக அதிகரித்துள்ளன. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மொபைல் இணைப்புகள் முறையே 61.9 கோடி மற்றும் 52.1 கோடியாக உள்ளன. இதில் ஜியோ நிறுவனத்தின் பங்கு அதிகமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்களின் எழுச்சியால் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் பெரியளவு நஷ்டத்தை சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இப்போது இந்தியாவின் மொபைல் மார்க்கெட்டை 35.03 சதவீத பங்கு, 40,08,03,819 வாடிக்கையாளர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
பாரதி ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் முறையே 32.6 லட்சம் மற்றும் 3.88 லட்சம் மொபைல் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்துள்ளன. வோடபோன் ஐடியா 37 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. அரசு நடத்தும் எம்.டி.என்.எல் 5,457 மொபைல் சேவை வாடிக்கையாளர்களை இழந்தது.
ரிலையன்ஸ் ஜியோவில் 40.19 கோடி வாடிக்கையாளர்கள், பாரதி ஏர்டெல் 15.57 கோடி, வோடபோன் ஐடியா 11.52 கோடி, பிஎஸ்என்எல் 2.3 கோடி ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் டாப் இடங்களில் உள்ளதாக டிராய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.