விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முயற்சி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்திய விமானப்படையை சேர்ந்த இரு மருத்துவர்கள் விண்வெளி மருத்துவத்தில் கைதேர்ந்த ரஷ்ய மருத்துவர்களிடம் பயிற்சி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்படவிருக்கின்றனர்.
விண்வெளி மருத்துவம்:
விண்வெளி மருத்துவம் என்பது விண்வெளி வீரர்களுக்கு விண்வெளி பயணத்தின் போதும் விண்வெளியை சென்றடைந்த பின்னரும் மனம் மற்றும் உடலில் நிகழும் மாற்றங்களை பரிசோதித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவது ஆகும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, ரஷ்யா, சீன ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவும் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அதற்கென ககன்யான் என்ற பெயரில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விண்கலம் விண்வெளியிலிருந்து பூமியை தாழ்வான நிலையில் 7 நாட்கள் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலத்தை உருவாக்க தேவையான உதிரி பாகங்கள் மற்றும் கருவிகளை தயாரிக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்த முயற்சியின் அடுத்தகட்டமாக விண்வெளி மருத்துவத்தில் பயிற்சிபெற இந்தியாவின் இரு விமானப்படை மருத்துவர்கள் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி மருத்துவ துறை மருத்துவர்களிடம் பயிற்சி பெற அனுப்பப்படவிருக்கின்றனர். இவர்களுக்கு யூரி காகரின் விண்வெளி ஆய்வு மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படுமென தெரிகிறது.