கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை அரசு நடத்த அனுமதித்த நிலையில் தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து விடையளிக்கலாம் என புதுச்சேரி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இறுதியாண்டு தேர்வுகள்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 21 முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை ஆன்லைன், ஆப்லைன் மூலம் எழுத அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது, இந்த பருவ தேர்வுகள் நேர்மையாகவும், சரிசமமாகவும் நடத்தப்படுவது அவசியம். எனவே தான் இந்த தேர்வுகள் ஆன்லைன், ஆப்லைன் அல்லது இரண்டும் கலந்த முறையில் நடக்கவுள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
வினாத்தாள்கள் மொத்த மதிப்பெண்களுடன் வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இறுதியாண்டு தேர்வில் இணைப்பு கல்லூரிகளுக்கு தேர்வறையில் புத்தகம் மற்றும் குறிப்பேடு அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் வீட்டில் இருந்து ஆன்லைனில் தேர்வு எழுதும் மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வுகளை எழுத வாய்ப்புள்ளது. ஆனால் கல்லூரிக்கு சென்று ஆன்லைன், ஆப்லைன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.
ஆப்லைனில் தேர்வு எழுதும் மாணவர்களும் பாடபுத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை பார்த்து எழுதலாம் என பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இணைப்பு கல்லூரியில் படிக்கும் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வுகள் எழுத உள்ளனர். ஆனால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் அனுமதிப்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், ஆன்லைன், ஆப்லைன் தேர்வுகள் இதில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் விருப்பமே. நிர்வாகம் அவர்களை கட்டாயப்படுத்த கூடாது என கூறியுள்ளார்.