தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகில் என்று கொடுத்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதற்கான ப்ரோமோஷன் பணி தற்போது படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ”லால் சலாம்” படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க கோரி தன்னார்வலர் செல்வம் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதாவது கவுரவ வேடத்தில் ரஜினி நடித்திருக்கும் ”லால் சலாம்” திரைப்படத்தில் முக்கிய நாயகியாக தன்யா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு தனது சோசியல் மீடியா பக்கத்தில் தமிழர்கள் குறித்து கொச்சையாக பேசியிருந்தார். அதாவது தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் நாங்கள் கொடுத்தோம்.
அதேபோல மின்சாரம் கேட்டீர்கள் கொடுத்தோம். எங்களுடைய அழகான பெங்களூருவை கொச்சைப்படுத்தினீர்கள், அத்தனையும் தாங்கிக் கொண்டோம். இப்படி கெஞ்சிக் கொண்டே இருக்கிறீர்கள் நாங்களும் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்றவாறு கூறியிருந்தார். மேலும் இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் தமிழர்களை அவமதித்து பேசிய தன்யா பாலகிருஷ்ணன் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என அந்த புகாரில் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.