சமீபகாலமாக இந்தியாவில் ஆன்லைன் கேமிங் நிறுவனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதமாக அதிகரித்து உள்ளனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு மூலம் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் 400 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி மாதந்தோறும் சுமார் ரூ.1,200 கோடியாக வசூல் அதிகரித்துள்ளது. 2022-23 மற்றும் 2023-24 ஆம் நிதியாண்டுகளில் சுமார் ரூ.1.12 லட்சம் கோடிக்கு மேல் GST வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுதவிர ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் வெற்றி பெறுபவர்கள், மொத்த தொகையில் 30 சதவீதம் TDS வரி வசூல் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.