தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் உறைபனி நிலவுகிறது. இந்நிலையில் வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தவிர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இதனால் மீனவர்கள் 27 மற்றும் 28 ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.