டில்லி பல்கலையில் நடந்த வன்முறை தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி ஜே.என்.யூ பல்கலை வன்முறை:
டில்லி ஜே.என்.யூ பல்கலையில் நேற்று இரவு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது முகமூடி அணிந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பியுள்ளன. மேலும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு நேற்று டில்லி, ஹைதெராபாத், மேற்குவங்கம், மும்பை ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
போலீசார் பாதுகாப்பு:
இந்நிலையில் இன்று (ஜன.,06) வாரணாசியில் உள்ள பானாரஸ் இந்து பல்கலை., அலிகர் இஸ்லாமிய பல்கலை., உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பல்கலை.,களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கவசம், தடிகளுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.