சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி போட வசதி செய்யுமாறு ஒடிசா மாநில அரசு அனைத்து மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையின் தீவிர தன்மை மிக மோசமாக உள்ளது. இணை நோய் இல்லாதவர்கள், இளைஞர்கள் கூட கொரோனா இரண்டாம் அலையில் உயிரிழந்து வருகின்றனர். இதன் காரணமாக நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது வரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் என்ற இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தம் 18,44,53,149 மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4,20,24,922 பேருக்கு இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் தங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்த்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஒடிசா அரசு, சுகாதார ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட உதவிகளை செய்யுமாறு அனைத்து மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.