தமிழகத்தில் ஏழை எளியோர்களின் மருத்துவ நலன் கருதி “முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு குடும்பமும் 1000க்கும் மேற்பட்ட நோய்களுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். ஆனால் இத்திட்ட பயனாளிகளுக்கு பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பலரும் பயன் பெற முடியாமல் அரசு மருத்துவமனைக்கு வருவதாக அரசு மருத்துவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த அறிக்கை அடுத்த நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.