தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர். ஆனால் நடந்து முடிந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதிற்கான காரணங்களை கண்டறிய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. இதன்படி பெரும்பாலான மாணவர்கள் கொரோனா காலங்களில் 10 வகுப்பு ஆல் பாஸ் ஆனவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இருப்பதால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே இவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி வருகிற ஜூன் மாதம் மறுதேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஆண்டிற்கு 2, 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் போதும் பொதுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தகவல்கள் இணையத்தில் உலா வருகிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில் “கொரோனா காலங்களில் ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பயப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இவர்களை ஊக்கமளிக்கும் விதத்தில் சிறப்பு அனுமதியாக “வருகைப்பதிவு முக்கியம் இல்லை தேர்வு எழுத ஆர்வமிருந்தால் போதும் உங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்குகிறோம்” என கூறப்பட்டது. ஆனால் இந்த விதிமுறை இம்முறை மட்டுமே அடுத்த கல்வியாண்டு முதல் வழக்கம்போல் 75% வருகைப்பதிவுகள் தான் பின்பற்றப்படும். இப்படியாக மாணவர்களை தேர்வு எழுத வைக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை புரிந்து பெற்றோர்களும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து பிள்ளைகளை தேர்வு எழுத அனுப்பி வையுங்கள். அதேபோல் மாணவர்கள் எவ்வித பதட்டமும் இன்றி தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.