தை அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து நீர்நிலைகளிலும் அதிகாலை தொடங்கி மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
ஆடி மற்றும் அமாவாசை நாட்களில் பித்ரு தோஷம் நீங்க, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அதனால் இன்று வியாழக்கிழமையான, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க ஆறு மற்றும் கடல் ஆகிய நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. முன்னதாக ஆடி மாதம் அமாவாசை தினத்தில் தமிழகத்தில் ஊரடங்கு நாட்களாக இருந்ததால், கோவில்களுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் ஊரடங்கு தடை ஏதும் இல்லாததால், மக்கள் காலை துவங்கி அனைத்து நீர்நிலைகளிளும் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகிறார்கள்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதற்காக புனித தலங்களான சென்னை கடற்கரை, மைலாப்பூர் கபாலீஸ்வர் கோவில், திருவள்ளுவர் வீரராகவ பெருமாள் கோவில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், மக்கள் காலை துவங்கி முன்னோர்களுக்கு படையலிட்டு, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். மேலும் குற்றாலம், பாபநாசம், தாமிரபரணி, வேதாரண்யம், கன்னியாகுமரி, திருச்செந்தூரிலும் அதிகாலை முதலே மக்கள் புனித நீராடி, தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.