சைவ உணவுகளை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவதில்லை. அதிலும் சத்தான உணவுகள் என்றால் அதன் சுவை சுத்தமாக யாருக்கும் பிடிப்பதில்லை. பாசிப் பருப்பை வைத்து புதிய விதமான சுவையான சைவ ஈரல் கிரேவி வைத்துக் கொடுத்தால் மிச்சமே வைக்கமாட்டாங்க. வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு – 1/2 கி
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 1
வரமிளகாய் – 2
இஞ்சிபூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப்பயிறை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பாசிப்பயிறு, மிளகு, வர மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது இலையை சதுரமாக நறுக்கி அடுப்பை சிறிதாக வைத்து தீயில் காட்டவும்.
அதன்பின் அதை இட்லி சட்டியில் வைத்து இந்த பாசிப்பருப்பு கலவையை ஊற்றி வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி அதனை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இப்பொழுது நாம் வெட்டி வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான ‘சைவ ஈரல் கிரேவி’ தயார்.