பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்திய விமானப்படையில் முறையாக இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய ராணுவத்தின் பலம் பன்மடங்கு பெருகி உள்ளது. சீனாவுடன் லடாக் எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நாளாக இது அமைந்துள்ளது.
ரஃபேல் விமானங்கள்:
பிரான்சில் இருந்து முதல் ஐந்து ரஃபேல் விமானங்கள் ஜூலை 27 அன்று அம்பாலா வந்தடைந்தன. இன்று காலை 10 மணிக்கு அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தின் 17வது ‘கோல்டன் ஆரோஸ்’ படைப்பிரிவில் ரஃபேல் விமானம் முறைப்படி இணைக்கப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினர்களாக பிரான்ஸ் ஆயுதப்படை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், விமானப்படைத் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் படவூரியா, பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார், டாக்டர் ஆர் சதீஷ் ரெட்டி, பாதுகாப்புப் பிரிவு தலைவர் டிஆர்டிஓ ஆகியோரும், இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனெய்ன் மற்றும் பிரான்சின் ஏர் ஜெனரல் எரிக் ஆட்டெலெட் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.
ரஃபேல் மற்றும் தேஜாஸ் விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன. அதைத் தொடர்ந்து அனைத்து மத வழிபாடுகள் படி பூஜைகள் நடத்தப்பட்டு ரஃபேல் விமானம் பாரம்பரிய முறைப்படி நீர் பீரங்கியின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வரவேற்கப்படும். இந்திய மற்றும் பிரெஞ்சு தூதரக குழுவினர் இவ்விழாவுக்குப் பின்னர் இருதரப்பு சந்திப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.