இந்தியாவில் இதுவரை 75 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கையில் உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் நாட்டின் 130 கோடி மக்களில் குறைந்தது பாதி பேர் (50%) அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு உள்ளார்.
கொரோனா பாதிப்பு:
உலகின் பிற நாடுகளில் கட்டுக்குள் வந்துள்ள கொரோனா பாதிப்பு, இந்தியாவில் சற்று குறையத் தொடங்கி உள்ளது. இதுவரை 7,594,763 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 115,236 பேர் உயிரிழந்து உள்ளனர். 6,730,617 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 747,649 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். COVID-19 நோய்த்தொற்றுகள் செப்டம்பர் நடுப்பகுதியில் உச்சத்திற்குப் பிறகு தற்போது குறைந்து வருகின்றன, ஒவ்வொரு நாளும் சராசரியாக 61,390 பேருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் மனிந்திர அகர்வால் கூறுகையில், “எங்கள் கணக்கெடுப்பின்படி தற்போது 30% பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வரும் பிப்ரவரிக்குள் இது 50% ஆக உயரக்கூடும். ஆனால் கொரோனாவின் தற்போதைய பரவலுக்கான மதிப்பீடு மத்திய அரசின் கணக்கெடுப்புகளை விட மிக அதிகமாக உள்ளது. இது செப்டம்பர் மாத நிலவரப்படி சுமார் 14 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறுகிறது.
ஆனால் கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் முற்றிலும் வேறுவிதமான கணக்கெடுப்பு முறைகளை பின்பற்றுகின்றனர். அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் மத்திய அரசின் கணிப்புகள் நீடிக்காது என்றும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றாவிட்டால் ஒரே மாதத்தில் 26 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவலாம் என எச்சரித்து உள்ளனர்.
பண்டிகை விடுமுறை காலம் நெருங்கி வருவதால் நாட்டில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்கள் இந்த மாதத்திலும் நவம்பர் நடுப்பகுதியிலும் நடைபெற உள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.