ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விஷவாயுக்கசிவு விபத்தினால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து உள்ளார்.
ரசாயன ஆலை:
விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆர்ஆர் வெங்கடாபுரம் கிராமத்தில் செயல்படும் எல்ஜி பாலிமர்ஸ் எனப்படும் ரசாயன தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்தது. அதிக அழுத்தம் காரணமாக ஆலையை சுற்றி பல கிலோமீட்டர்களுக்கும் இந்த விஷவாயு பரவியது. இதனால் அதிகாலையில் நடந்து சென்றவர்களும், அந்த பகுதியில் வசித்தவர்களும் இதனை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.
13 பேர் பலி:
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த ஆந்திர போலீசார் அதனை சுற்றியுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மக்களை வெளியேற்றினர். விஷவாயு தாக்கியதால் தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல் கூறினார்.
மேலும் விஷவாயு தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி நிவாரணமும், அதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு நீண்ட நாட்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்யவும், நிலைமையை கண்காணிக்கவும் உயர் அதிகாரிகளை நியமித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |