தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகளை போக்குவரத்து துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து துறை அதிரடி :
தமிழகத்திலுள்ள, அரசு பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றனர். மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என அரசு அறிவித்ததில் இருந்து, பேருந்தில் மகளிரின் வருகை அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் சமீப தினங்களாக, இலவச பேருந்துகளில் மகளிர்க்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, மாநில போக்குவரத்து துறை சில புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, பேருந்துகளை வழக்கமான மார்க்கங்களிலேயே இயக்க வேண்டும் எனவும், ரூட்டை மாற்றி இயக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. பயணிகளிடம் லக்கேஜ் இருந்தால் அதற்குரிய கட்டணச் சீட்டை ஓட்டுனர் கொடுக்க வேண்டும் எனவும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கண்ணியத்துடன் பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய நிறுத்தத்தில் மட்டுமே பேருந்து நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும் எனவும், பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாகவே பஸ்சை நிறுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பணியாளர்கள் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.