தமிழகத்தின் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதில், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் பள்ளி திறப்பது குறித்து அம்மாவட்ட அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதாவது, பள்ளி திறப்பது குறித்து மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என்றும், சிறப்பு வகுப்புகள் என்று கூறி மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரைமரி மெட்ரிக் உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.