பொதுவாக மக்கள் பலருக்கு ரயில்களில் பயணம் செய்வது என்றால் கொள்ளை பிரியம். அதிலும், தொடர் விடுமுறை வந்து விட்டால் மலை பகுதிகளில் இயங்கும் ரயில் சேவையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், தமிழகத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக, இந்த பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியதால் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதம் அடைந்தன. இதனால், தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றதால் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 22 நாட்கள் ஆன நிலையில், இன்று (டிசம்பர் 14) முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு ரயில் சேவை தொடங்கி உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.