தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயலின் பாதிப்பில் இருந்து சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு மக்கள் திருப்பி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவை கணக்கெடுத்த அடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி. அவ்வாறு மின் கட்டணம் செலுத்த தவறினால், மின் விநியோகம் துண்டிக்கப்படும்.
இதனை திரும்ப பெற அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்திய பிறகு மின் விநியோகம் வழங்கப்படும். இந்நிலையில், கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் புயல் காரணமாக செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அபராதமின்றி கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.