கொரோனா பரவல் தீவிரமடைந்த காரணத்தால் சென்னையில் மட்டும் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நாளை முதல் (ஆகஸ்ட் 18) திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு:
கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு தொழில் துறைகள் முடங்கியதால் அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் பல மாநிலங்கள் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தன. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு செய்யப்படாமல் பிற சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும் நிதி பற்றாக்குறை அதிகரித்த காரணத்தால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்னையில் நோய் பரவல் தீவிரமாக இருந்த காரணத்தால் அங்கு மட்டும் திறக்கப்படவில்லை.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
டோக்கன் முறை, சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கடைகளை மீண்டும் திறந்தது. இதனால் ஊரடங்கு காலத்திலும் மதுபான விற்பனை ஜோராக நடைபெற்றது. வழக்கமாக 12 மணிக்கு திறக்கப்படும் கடைகள் காலை 10 மணிக்கே திறக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளதால் நாளை முதல் (ஆகஸ்ட் 18) டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் கடைகள் முன் பேரிகேடுகள், தடுப்புகள், கிருமி நாசினி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 800 கடைகளில் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 100 கடைகளை தவிர 700 கடைகள் திறக்கப்பட உள்ளது.
காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை கடைகள் திறக்கப்படும் எனவும் ஒரு நாளைக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடைக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.