தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தட்டம்மை, சின்னம்மை போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திற்கான ஆபத்து:
தமிழகத்தில் கோடை காலத்தின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதலே துவங்கிவிட்டது. அன்று முதலே கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கமும் சற்று அதிகமாகவே நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி விரைவில் அக்னி நட்சத்திரம் வரவிருப்பதால் வரும் மாதங்களில் வெப்பநிலை இன்னும் அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இவ்வாறு வெப்பநிலை தமிழகத்தில் அதிகரித்து கொண்டே செல்வதால் பொதுமக்களுக்கு வெப்ப நோய்களான தட்டம்மை, சின்னம்மை ஆகிய நோய்களும், அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசை பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்ற உடல் உபாதைகளும் ஏற்பட கூடும். எனவே இந்த நோய்களில் இருந்து தங்களை காக்க மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொதுமக்களை தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:
- தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.
- இளநீர், மோர் மற்றும் இயற்கை பழச்சாறுகளை பருக வேண்டும்.
- திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
- பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
- வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
- செயற்கை குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.