புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சிறுமி கொலை வழக்கிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த கொலை வழக்கின் கீழ் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நாளுக்கு நாள் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
மேலும் இந்த இளைஞர்கள் இருவரும் இப்போது காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சிறப்பு விசாரணை குழு தலைவர் கலைவாணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இன்று மத்திய சிறைச்சாலைக்கு சென்று குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை அவர்கள் கொடுத்த வாக்குமூலம் பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த விசாரணையின் முடிவில் சிறுமியின் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கூறியுள்ளனர்.