சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட சாலை போக்குவரத்து சேவையை எளிமையாக்க கிளாம்பாக்கத்தில் பல்வேறு வசதிகளுடன் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்னி பேருந்து சங்கங்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பயணிகளை ஏற்றவோ இறங்கவோ கூடாது என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் சங்கம் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல அனுமதி தர வேண்டும். மேலும் பயணிகளை மாநகர எல்லைக்குள் ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் அனுமதி கேட்டுள்ளனர். இது தவிர கிளாம்பாக்கத்திற்கு முழுமையாக மாற இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு போக்குவரத்து கழகம் என்ன முடிவு எடுப்பார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.