தடுப்பூசி போடுவதை ரேஷன் கார்டுகள் உடன் இணைக்கும் விதியை அரசு கொண்டு வர வேண்டும் எனவும் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் தர வேண்டும் எனவும் நடிகையும் பாஜக தலைவருமான குஷ்பு அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான திரை உலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தையும் மற்றும் தடுப்பூசி போட மக்களை ஊக்கப்படுத்தியும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது பாஜக தலைவர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, “கொரோனா தடுப்பூசி வீணடிக்கும் பட்டியலில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. ஏப்ரல், 11ம் தேதி வரை, 52 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மாநிலங்களால் வீணடிக்கப்பட்டு உள்ளன. தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களின் விவரங்களை, ரேஷன் கார்டுகளுடன் இணைக்கும் விதியை, அரசு கொண்டு வர வேண்டும். தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே, ரேஷன் பொருட்கள் தர வேண்டும்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது. ஆயினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், இதற்கான ஒரே நடவடிக்கை கொரோனா தடுப்பூசி என்பதால் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில் குஷ்பு தெரிவித்துள்ள இக்கருத்து வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.