இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இதே வேகத்தில் சென்றால் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்துவிடும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி எச்சரிக்கை..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 34,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதன்படி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பத்திலிருந்தே மத்திய அரசு உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று விமர்சித்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரத்தில் 10 லட்சத்தை எட்டும என்று எச்சரித்திருந்தார். அதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று 10 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மத்திய அரசை விமர்சித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவி வந்தால் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் 20 லட்சம் பேர் நாட்டில் நோய் தொற்றுக்கு ஆளாவார்கள். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.