இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13 வது சீசன் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துவங்க உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த முறை பங்கேற்கும் 8 அணிகளும் சம பலத்துடன் உள்ளதால் யார் கோப்பையை வெல்வார்கள் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.
பர்பிள் கேப்:
ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை விளாசும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்கள் வீழ்த்துபவருக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப்படும். அனைத்து நாட்டினரும் கலந்து கொள்ளும் போட்டி என்பதால் பவுலர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்வி – இந்த முறை பர்பிள் கேப் வெல்லப்போவது யார்?? இப்போது ஐபிஎல் 2020 போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள டாப் 5 பவுலர்களை பார்க்கலாம்.
1) ஜஸ்பிரீத் பும்ரா
நவீன கால கிரிக்கெட் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜஸ்பிரித் பும்ரா கருதப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. இவரது ஆரம்ப ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இந்த முறை, லசித் மலிங்கா இல்லாத நிலையில், டெத் ஓவர்களில் ரன்களையும் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளையும் எடுக்க வேண்டும். இதனால் பும்ராவிற்கு சிக்கல் அதிகம். கடந்த சீசனில் பும்ரா மும்பை அணிக்காக 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆண்டும் அதே சிறப்பான பார்மை கொண்டு வந்தால் பர்பிள் கேப் இவருக்கு தான்.
2) பாட் கம்மின்ஸ்
பாட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸால் ரூ .15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். இவ்வளவு விலை கொடுக்கப்பட்டு உள்ளதால் கம்மின்ஸ் மீதான எதிர்பார்த்து அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளாக நல்ல பார்மை தொடர்ந்து வருகிறார் கம்மின்ஸ். வேகமும், துல்லியமும் அவரது மிகப்பெரிய பலம் மற்றும் நிச்சயமாக இந்த சீசனில் கவனிக்க வேண்டிய பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
3) ரஷீத் கான்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பவுலிங்கின் முதுகெலும்பாக இருந்து வருகிறார் ரஷீத் கான். ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை அள்ளுவது இவருக்கு கைவந்த கலை. கடந்த சீசனில் 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்ற பின் தான் கல்யாணம் செய்து கொள்வேன் என கூறியுள்ள ரஷீத் கான், ஐபிஎல் போட்டியிலும் ஜொலிப்பார் என்பது உறுதி.
4) காகிசோ ரபாடா
டெல்லி கேபிடல்ஸின் வேகப்பந்து வீச்சில் டாப் கிளாஸ் பவுலர் ரபாடா. சூழ்நிலைக்கு ஏற்றவாறு பந்துவீச்சை மாற்றும் ரபாடா கடந்த சீசனில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நூலிழையில் முதலிடத்தை இழந்தார். கடந்த முறை டெல்லி அணி பிளே ஆப் சுற்று வரை செல்வதற்கு முக்கிய காரணம் ரபாடா. இம்முறை இளம் வீரர்களுடன் களம் இறங்கும் டெல்லி அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ரபாடா மேஜிக் பலித்தால் இம்முறை டெல்லி கோப்பையை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம்.
5) தீபக் சாஹர்
கடந்த ஆண்டு 22 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்கு விக்கெட்டுகளால் முதலிடத்தை இழந்தார் சாஹர். இம்முறை ஐபிஎல் தொடக்கத்தில் கொரோனா போன்ற நெருக்கடிகளை சந்தித்த இவர், அதிலிருந்து மீண்டு மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார். சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில் சாஹர் சாதிப்பார் என்பதில் ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.