தமிழகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை உட்பட அனைத்து ஊர்களிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
1998க்கு பிறகு இல்லை
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 1998ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு குழந்தைக்கும் இளம்பிள்ளை வாதம் (போலியோ) பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் இந்த நோயின் தாக்கம் ஒரு போதும் தமிழகத்தைத் தொட்டு விடக்கூடாது என்பதற்காக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
ஜனவரி 19 அன்று நடக்கவுள்ள முகாம்களில் பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தவறாமல் அழைத்து வந்து முகாம்களில் பங்கு பெற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வர இயலாத குழந்தைகளுக்கு அதற்கு அடுத்த நாள் அவரவர் வீடுகளுக்கே வந்து போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.