கொரோனா பாதிப்பில் இருந்து, தொழில் துறை மெல்ல மீண்டு வருகிறது. அக்டோபர் மாதம் ரூ. 1,05,155 கோடி ஜி.எஸ்.டி., வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த எட்டு மாதத்தில் முதல் முறையாக ஒரு லட்சத்தை எட்டி உள்ளது.
தமிழகம் எப்படி
கடந்த மார்ச் மாதம், கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ துவங்கியது. இதனை கட்டுப்படுத்த, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் துறை முடங்கியதால், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி., ) குறைந்தது. மத்திய, மாநில அரசுகள் வரி வருவாய் பாதிக்கப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் தனியார், அரசு அலுவலங்கள் முழுவீச்சில் செயல்பட துவங்கின. இதனையடுத்து, ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்துள்ளது. அக்டோபர் மாதம் ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி., ரூ.19,193, மாநில ஜி.எஸ்.டி., ரூ.5,411, ஒருங்கிணைத்த ஜி.எஸ்.டி., ரூ.52,540 கோடியாக கிடைத்துள்ளது.
கடந்த, 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு லட்சம் கோடியை எட்டி உள்ளது. இதற்கு முன், பிப்ரவரி மாதம் 1,05,000 கோடி வசூலாகி இருந்தது. கடந்த 2019 அக்டோபரில், 95,380 கோடி வருவாய் கிடைத்திருந்தது. இதனுடன், ஒப்பிடும்போது, தற்போது 10 சதவீதம் கூடுதலாக வசூலாகி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, 2019 அக்டோபர் (6,109 கோடி ) உடன் ஒப்பிடும் போது, இம்முறை (6,901 கோடி ) 13 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது.