தமிழகத்தில் போலி பத்திரங்களை சார்பதிவாளரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டம்:
தமிழகத்தில் பல ஏராளமான ஏக்கர் நிலங்கள் போலியான ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்டங்கள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மதுரை ஒத்தக்கடையில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி, செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், பத்திரப் பதிவுகளை நேரடியாக ரத்து செய்ய தற்போது பதிவுத்துறை அதிகாரம் இல்லை என்று கூறினார்.மேலும் போலியான பத்திர பதிவுகளை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த சட்டத்தின் மூலம் போலி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 1000 கணக்கான போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி கடனுக்கான சொத்து பிணைய உரிமைப்பத்திரத்தை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி நாளை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.