இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கான கருவிகள் குறைவாக இருக்கிறது என்ற குற்றசாட்டு இருந்து வந்து உள்ளது. ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நமது ஆராய்ச்சியாளர்கள் பல கருவிகள் அதிலும் குறிப்பாக குறைவான விலையில் கண்டு பிடித்து உள்ளனர்.
கொரோனாவின் கோரத்தாண்டவம்:
கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து தன வருகின்றது. குறைவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படுவதாக இல்லை என்றே சொல்லலாம். அதிலும் தொடர்ந்து 3 நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு தொற்று உறுதி செய்ய பட்டு உள்ளது. ஆனால் நம் மனதில் பால் வார்க்கும் விதமாக ஐ.ஐ.டி. என்று அழைக்கப்படுகிற நமது இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஓசைப்படாமல் பல கருவிகளை கண்டு பிடித்து உள்ளனர்.
புதிய கண்டுபிடிப்புகள்:
மலிவு விலை போர்ட்டபிள் வென்டிலேட்டர்கள்…
குறைந்த விலை கொரோனா பரிசோதனை கருவிகள்…
சிறப்பான டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்…
தொற்று ஒட்டாத துணிகள்
இந்த கருவிகள் விரைவாக சந்தைக்கு வர இருக்கின்றன. பரிசோதனை கருவிகள் குறைந்த விலைக்கு தாராளமாக கிடைக்கிறபோது, பரிசோதனைகள் பரவலாக்கப்பட வழி திறக்கும். பரிசோதனைகள் பரவலாக்கப்பட்டால் விரைவாக தொற்று கண்டுபிடிக்கப்படும். விரைவாக கண்டுபிடிக்கப்பட்டால் தொற்று தீவிரம் அடைவதற்குள் குணம் அடைய செய்யலாம். இதற்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள், டெல்லி ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள்.
“இதுபற்றி டெல்லி ஐ.ஐ.டி. இயக்குனர் வி.ராாம்கோபால் கூறும்போது, “சில பெரிய நிறுவனங்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், கொரோனா பரிசோதனையை வணிகமயமாக்க எங்களை அணுகி உள்ளன. எங்களால் நிர்ணயிக்கப்பட்ட தரம், விலையை ஏற்றுக்கொள்கிற நிறுவனங்களுக்குத்தான் நாங்கள் உரிமங்களை வழங்குவோம். இதனால் நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை உயர்த்த முடியாது நாங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஜெனீ லேபரட்டரீஸ் அப்படிப்பட்ட நிறுவனம்தான். இன்னும் சில நிறுவனங்கள் இந்த வரிசையில் சேரும்” என குறிப்பிட்டார்.
தொற்று ஒட்டாத துணி:
இந்த துணிகள் மருத்துவமனை பயன்பாட்டுக்கு ஆகும். இந்த துணியை கொண்டு திரைசீலைகள், படுக்கை விரிப்புகள் மேலும் சீருடைகள் கூட தயாரிக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தொற்று ஒட்டாத துணிகள், முதலில் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பயன்படுத்தி சோதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணியை பல முறை சலவை செய்த பின்னரும் கூட அதன் தரம் குறையாது. செயல்பாட்டில் பாதிப்பு இருக்காது. டாக்டர்கள், நர்சுகள் சீருடைகளை கூட இந்த துணியில் தைத்து பயன்படுத்த முடியும். இந்த துணி முற்றிலும் நச்சுத்தன்மை இல்லாதது என்பது மட்டுமல்ல, விலையும் மலிவானது.
டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்:
அடுத்ததாக இந்த டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் உருவாகியவர்கள் மும்பை ஐ.ஐ.டி.யினர். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் நோயாளியின் இதயத்துடிப்பை தொலைவில் இருந்தே இந்த டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதுதான். இதன் மூலம் தொற்று பாதிப்பு மிகுதியாக குறையும் என்று கூட சொல்லலாம். இதன் தரவுகள், வயர்லஸ் தொழில் நுட்பத்தில் புளூடூத் வழியாக டாக்டர்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே கொரோனா நோயாளிகளின் அருகில் சென்று அவர்களின் இதயத்துடிப்பை அறிந்துகொள்கிற அபாயத்தில் இருந்து டாக்டர்களும், நர்சுகளும் இதன்மூலம் விடுதலை பெற முடியும். ஏற்கனவே இந்த டிஜிட்டல் ஸ்டெதஸ்கோப் 1000 மருத்துவமனைகளுக்கு அனுப்ப பட்டு உள்ளது.
புது வகை ட்ரோன்கள்:
அசாம் மாநிலம், கவுகாத்தி ஐ.ஐ.டி. தொழில் நுட்ப வல்லுனரின் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மாருட் ட்ரோன்டெக் நிறுவனம், 2 விதமான ட்ரோன்களை (சிறிய ஆளில்லாத விமானம்) உருவாக்கி உள்ளது. இவற்றை தற்போது தெலுங்கானா மாநில அரசு பயன்படுத்த தொடங்கி விட்டது.
இந்த ட்ரான்கள் கிருமிநாசினிகளை தெளிப்பதற்கு, கூட்டமான இடங்களில் நோய் பரவாமல் தடுக்க மக்களுக்கு தேவையான தகவல்களை ஸ்பீக்கர்கள் மூலம் அறிவிக்கவும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.
போர்ட்டபுள் வென்டிலேட்டர்கள்:
கான்பூர் ஐ.ஐ.டி., ஐ.சி.ஐ.சி.ஐ. செக்யூரிட்டிஸ் நிறுவனத்துடன் சேர்ந்து மலிவு விலை போர்ட்டபுள் வென்டிலேட்டர்களை உருவாக்குகிறது. ஐ.ஐ.டி.யின் 2 மாணவர்கள் சேர்ந்துதான் இந்த வென்டிலேட்டர்களை வடிவமைத்து இருக்கிறார்கள். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக கொண்டு செல்ல முடியும், விலையும் மலிவு என்பது இதன் சிறப்பம்சங்களாக அமைகின்றன. வென்டிலேட்டர்கள் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில் இந்த வென்டிலேட்டர் விலை வெறும் 70 ஆயிரம் ரூபாய்தான். இது பற்றி கான்பூர் ஐ.ஐ.டி. இயக்குனர் அபய் கரண்டிகர் கூறும்போது, “இந்த ஆண்டில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரித்து வழங்க திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் இந்த வென்டிலேட்டர்கள் சந்தையில் விற்பனைக்கு வந்து விடும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்த கண்டுபிடிப்புகள் மூலம் நம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று நம்பலாம்.