இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படைப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லால் சலாம். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்க, நடிகை தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், தம்பி ராமையா போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா கடந்த (ஜனவரி 26) பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் நடிகை தனியா பாலகிருஷ்ணா கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு தனியா தனது அதிகாரப்பூர்வ X தளத்தில், தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள், எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து கொச்சைப்படுத்துகிறீர்கள், எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம் என்ற சர்ச்சை பதிவை பதிவிட்டிருந்தார். இதற்கு அதிக அளவில் எதிர்ப்பு கிளம்பியது, மேலும் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் லால் சலாம் படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கியிருப்பது குறித்து நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஏன் தனியாவை தமிழ் படத்தில் நடிக்க வைக்க வேண்டும், வேறு நடிகைகளே இல்லையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது.