தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்க இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதிக்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 சதவீதம் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி, படிவம் 12 டி வழங்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கை மார்ச் 20 (நாளை) முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால், தகுதியானவர்கள் விரும்பும் பட்சத்தில் தபால் வாக்களிக்கலாம். ஒரு வேளை வாக்குச்சாவடிகளில் வந்து ஓட்டு போட வேண்டும் எனில் அவர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள், சக்கர நாற்காலிகள் இருக்கும் படியான வசதி, போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.” என கூறி உள்ளார்.